விவசாயம் செழித்தோங்கவும், குடும்பங்களில் நலமும் வளமும் செல்வச் செழிப்பு பெருகவும் கேரளாவில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி வழிபாடு கோவில்களில் நடைபெறுகிறது.
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் புத்தரிசி பூஜை நடைபெற உள்ளதாக சபரிமலை தேஸ்வதானம் போர்டு அறிவித்துள்ளது.
இதற்காக முந்தைநாளான 2-ந் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். பின்னர் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
மறுநாள் 3-ந் தேதி நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து கொல்லம் மாவட்டம் அச்சன்கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும்.
பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் எனவும் தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறை புத்தரிசி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாகவும் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.

