உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் திருக்கோயிலில் தனி சன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் மஹாகணபதி ஹோமத்துடன் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து வராஹி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் என பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதற்கு முன்னர் சிறப்பு யாகம் செய்யப்பட்டு புனித நீரினை வராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பத்து நாட்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரி விழாவில் இன்று இனிப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பெரிய கோயில் வளாகத்தில் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

