உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் (பெருவுடையார் கோவில்) ஸ்ரீ மகா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா இன்று தொடங்கியது. முதல் நாள் நிகழ்வாக, மகா கணபதி ஹோமம் மற்றும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மாலை நேரத்தில் இனிப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தஞ்சை பெரியகோவிலில் அருள்பாலிக்கும் வாராஹி அம்மனுக்கு மட்டுமே இந்த ஆஷாட நவராத்திரி விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நவராத்திரி விழா நாட்களில் அம்மனுக்கு இனிப்பு, மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய் பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகை, காய்கறி மற்றும் புஷ்ப அலங்காரங்கள் என ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை வாராஹி ஹோமமும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

