சக்தி வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வாராஹி நவராத்திரி (ஆஷாட நவராத்திரி) நேற்று (ஜூலை 14) தொடங்கியது. ஜூலை 23 வரை நடைபெறும் இந்த ஒன்பது நாள் விழாவையொட்டி,தமிழகம் முழுவதும் உள்ள வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம், ஹோமம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன.
ஆனி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை அனுஷ்டிக்கப்படும் வாராஹி நவராத்திரி, சக்தி வழிபாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புரட்டாசி சாரதா நவராத்திரி, தை வசந்த நவராத்திரியைப் போலவே, ஆஷாட நவராத்திரியும் வாராஹி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய விழாவாக பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது.
இந்த விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில், சென்னை தாம்பரம் அருகே உள்ள ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் உள்ளிட்ட பல ஆலயங்களில் தினமும் சிறப்பு அலங்காரம், மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மூலமந்திர ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாத விநியோகமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சப்த மாதர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி தேவி, இரவு நேரத்தின் அதிபதியாகக் கருதப்படுவதால், இந்த நவராத்திரியில் மாலை மற்றும் இரவு நேர வழிபாடுகளுக்கு தனிச் சிறப்பு உண்டு என ஆன்மிக மரபுகள் கூறுகின்றன.
வாராஹி நவராத்திரி வழிபாட்டின் பலன்கள்
ஆன்மிக நம்பிக்கையின்படி, வாராஹி நவராத்திரி நாட்களில் அன்னையை வழிபடுவதன் மூலம் கடன் சுமை குறைதல், பொருளாதார முன்னேற்றம், மன அமைதி, குடும்ப ஒற்றுமை, எதிரிகளின் தொல்லையிலிருந்து பாதுகாப்பு, கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை சக்திகள் நீங்குதல், சொத்து மற்றும் நிலம் தொடர்பான பிரச்சினைகளில் முன்னேற்றம் போன்ற பலன்கள் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், இந்த ஒன்பது நாட்களும் பக்தியுடன் வழிபட்டால் வாழ்வில் நலனும் வளமும் பெருகும் என்பது ஐதீகம்.

