கீழ்வேளூரை அடுத்த இரிஞ்சியூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில், வைகாசித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த இரிஞ்சியூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில், வைகாசித் திருவிழா மே 22-ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காவடி எடுத்தல், மாவிளக்கு பூஜை மற்றும் அம்மன் வீதியுலா எனப் பல்வேறு நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.
திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான தீமிதி உற்சவம் மே 25ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், விரதமிருந்து காப்புக்கட்டிய 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
தீமிதி விழாவைத் தொடர்ந்து, அருள்மிகு செல்லமுத்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மன் வீதியுலா காட்சியும் நடைபெற்றது. இதில், இரிஞ்சியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனைத் தரிசித்து அருள் பெற்றனர்.
