ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்திமிகு சாணாத்தி அம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மகா கும்பாபிஷேக விழா கடந்த 17-ம் தேதி முறைப்படி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களாக கணபதி பூஜை, கோ பூஜை, விசேஷ யாகசாலை பூஜைகள் மற்றும் மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் வேத பண்டிதர்கள் முழங்கிய வேத மந்திரங்களுடன் பக்திப்பூர்வமாக நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக, நிர்ணயிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கப் புறப்பாடாயின. பின்னர், கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கருவறையில் உள்ள ஸ்ரீ சக்திமிகு சாணாத்தி அம்மன் திருவுருவ சிலைக்கும் புனித நீராட்டம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் முறைப்படி நிறைவு பெற்றது.

கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கூடியிருந்த திரளான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசித்து வழிபட்டனர். விழாவையொட்டி ஆலய நிர்வாகம் சார்பில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

