நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் 500 ஆண்டுகள் வரலாறு கொண்டது. உலக அளவில் இல்லாத வகையில் ஓர் தனி சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு..
தல வலாறு :
முன்பொரு காலத்தில் விவசாய நிலமாக இருந்த இந்த பகுதியில் வழக்கம் போல ஒரு விவசாயி தனது வயல்களை உழுது கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. பின்னர் அங்கு தோண்டிப்பார்க்கும் பொது சுயம்பு வடிவில் அம்மன் வெளிப்பட்டார். பின்னர் ஒருவருக்கு அருள்வாக்கு வந்து கோயில் கட்டுமாறு உத்தரவு வரவே, மக்கள் ஒன்றுக் கூடி கோயில் அமைத்தனர்.
பெயர் வந்த வரலாறு :
உலக அளவில் இல்லாத அளவிற்கு, இந்த கோயிலில் ஒரு சிறப்பு உண்டு. பொதுவாக மாரியம்மன் கோயில்களில் திருவிழா காலங்களில் மட்டுமே கம்பம் நடுவது வழக்கம். ஆனால், இந்த கோயிலில் மட்டுமே மூன்று கிளைகள் கொண்ட மரக்கம்பம் எப்போதும் அம்மன் சன்னதியின் முன்பாக நிரந்தரமாக இருக்கும். இந்தக் கம்பம் அம்மனின் கணவரைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இக்கோவிலில் அம்மன் எப்போதும் தனது கணவரை தரிசித்து கொண்டபடி இருப்பதால், இவருக்கு ”நித்திய சுமங்கலி” என்ற பெயர் வந்தது. பெண்கள் இக்கோயிலுக்கு சென்று வழபட்டால், தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு.
கோயில் சிறப்பு :
இந்த கோவிலில் உள்ள கம்பத்தை வழிபட்டு தயிர் சாதம் நைவேத்தியம் செய்து பிரசாதமாக உட்கொள்ள, ஒருவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
கண் நோய்கள் மற்றும் பிற நோய்களிலிருந்து நலம் பெற இத்தலத்து அம்மனை வழிபடுவது நலம் தரும்.
கணவன்மார்களின் உடல் நோய்வாய்ப்பட்டிருந்தால் இக்கோவிலுக்கு சென்று கொடிமரத்தில் பாலோ அல்லது தண்ணீரோ ஊற்றி வழிபடுவது நல்ல மாற்றத்தை தரும்.
திருவிழாக்கள் :
ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு திருவிழா நடைபெறும். 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் வலம் வருவாள். குறிப்பாக பூச்சாட்டு விழாவில் அம்மனை மலர்களால் நிரப்பி விழா எடுப்பார்கள்.
கம்பம் நடும் நாளில் புதிய கம்பம் மாற்றப்பட்டும். பின்னர் அக்கினி சட்டி எடுத்தல், தீமிதித்தல், அங்கபிரதட்சணம், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் போன்று இந்த 15 நாட்களும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.
ஒவொரு மாதங்களிலும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறுகின்றன. காய்கனி அலங்காரம், வெற்றிலை அலங்காரம், வேப்பிலையாடை அலங்காரம், வளையல் பூஜை(வளைகாப்பு), விளக்கு பூஜை போன்றவை நடைபெறும்.
மேலும் நவராத்திரி கொலுவிலும், நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்து அருள்புரிவாள்.

