கோவை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் மூலம் தங்களது தலையெழுத்து மாறும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவிலில், பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நூதன நேர்த்திக்கடன் வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பள்ளபாளையத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மகாலட்சுமி அம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் துவக்கமாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மனின் திருக்கல்யாண வைபவமும் விமரிசியாக நடத்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு இன்று நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, பக்திப் பரவசத்தில் அருள் வந்து ஆடியவாறு வந்த கோவில் பூசாரி, பூஜை செய்யப்பட்ட தேங்காய்களை வரிசையாக அமர்ந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையிலும் சடாரென உடைத்தார். பின்னர், தலையில் தேங்காய் உடைத்துக்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பூசாரி சாட்டையடி நேர்த்திக்கடனையும் நிறைவேற்றினார். காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த வினோத வழிபாட்டினை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

