தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில், வைகாசி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர்.
வைகாசி அமாவாசை தினமான நேற்று அதிகாலையிலேயே மேல்மலையனூர் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு நெய், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனைத் திரவியங்களால் மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் உற்சவர் அங்காளம்மன் “சமயபுரம் மாரியம்மன்” திருஅலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஊஞ்சல் உற்சவம் இரவு 11 மணியளவில் தொடங்கியது. பம்பை, உடுக்கை மற்றும் மேளதாளங்கள் முழங்க, பூசாரிகள் உற்சவர் அங்காளம்மனைத் தங்களது தோள்களில் சுமந்து வந்து வடக்கு வாசல் எதிரே உள்ள ஊஞ்சல் மேடையில் எழுந்தருளச் செய்தனர்.
அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து பூசாரிகள் தாலாட்டுப் பாடல்களைப் பாடி, ஊஞ்சலை அசைத்தனர். அந்தப் நள்ளிரவு வேளையில், ஊஞ்சல் மேடை எதிரே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது கைகளில் கற்பூரம் ஏற்றி, அம்மனை வழிபட்டனர்.
அமாவாசை திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகத் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் மேல்மலையனூருக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி பாதுகாப்பாகத் தரிசனம் செய்வதற்காக, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

