கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள கானூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மன் கோயிலின் ஆடி மாதத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற 501 பால்குட உற்சவத்தில் திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் கோலாகலமாக நடந்து வருகின்றன. திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் பால்குட ஊர்வலம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவிற்காக காப்பு கட்டிய நூற்றுக்கணக்கான பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட பால்குடங்களை தங்களது தலையில் சுமந்தபடி ஊர் குளக்கரையில் இருந்து புறப்பட்டனர். மேளதாளங்கள் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த இந்த ஊர்வலம் செல்லியம்மன் கோயிலைச் சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து, பாலைக் கொண்டு அம்மனுக்குச் சிறப்புப் பாலபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில் கானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்து அருள் பெற்றனர்.

