உலகப்புகழ் பெற்ற அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவின் முதல் நாள் தேரோட்டத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஓம் காளி,ஜெய் காளி என முழங்கி தேரை இழுத்து வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருத்தலம் உள்ளது. இத்திருத்தலத்தில் இருக்கும் ஸ்ரீவீரமாகாளியம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் காப்பு கட்டி திருவிழா நடத்தப்படும். அதன்படி கோவில் நிர்வாகிகளால் முடிவெடுக்கப்பட்டு கடந்த 21.07.2026 அன்று கொடியேற்றத்துடன் காப்பு கட்டப்பட்டது.
காப்பு கட்டுதலுக்கு பிறகு தினந்தோரும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தும்,வீதி உலா நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
திருவிழாவின் முக்கிய நாளான இன்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனுக்கு முதல் நாள் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இத்திருத்தலத்தின் தேரோட்ட திருவிழாவானது இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில் முதல் நாளான இன்று தேரோட்டம் தொடங்கப்பட்டது.
தேரோட்டத்தில் பக்தர்கள், மெய்யன்பர்கள் என சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓம் காளி,ஜெய் காளி என்ற கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரின் முன் பகுதியில் மங்கள வாத்தியங்கள் முழங்க தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து சென்றவர்கள் ஆடி வருது பாரு, அறந்தாங்கி அம்மன் தேரு என்று பாடி உற்சாகத்துடன் இழுத்து சென்றனர்.தேரோட்ட திருவிழாவிற்கான பாதுகாப்பு பணியில் அறந்தாங்கி காவல்துறையினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

