சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதிகாலை கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வாரம் ஆரம்பிக்கும் திருவிழா புரட்டாசி மாதம் வரை 12 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மஞ்சள், சந்தனம், வெள்ளி, தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்படும் 108 சிறப்பு சங்காபிஷேகம் என்று ஆடி மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து மாலையில் 108 பெண் பக்தர்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 5 வாரம் ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் இன்று காலை ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டனர். தண்ணீர், மோர், கூழ், பானகம் போன்றவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.
தேவி கருமாரியம்மனை தரிசனம் செய்ய திருவேற்காடு, பூந்தமல்லி, போரூர், மதுரவாயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

