முருகப்பெருமானின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக உண்டியல்களில் பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர்.
இந்த உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி மாதந்தோறும் வழக்கமாக நடைபெறுவதுண்டு. ஜூன் மாத இறுதி கணக்கு முடிவடைந்த நிலையில், புதிய கணக்குத் தொடக்கப்பட்டு கடந்த 17 நாட்களாக உண்டியல் வசூல்கள் சேகரிக்கப்பட்டன. இன்று கோவில் நிர்வாக அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில், கோவில் தக்கார் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் அருணாச்சலம் ஆகியோரின் முன்னிலையில் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
சுமார் 100-க்கும் மேற்பட்ட உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர். இதில், பக்தர்களின் காணிக்கையாக 2 கோடியே 96 லட்சத்து 89 ஆயிரத்து 122 ரூபாய் ரொக்கப் பணமாக வசூலாகியுள்ளது. இதுமட்டுமின்றி, 620 கிராம் தங்கம், 10 ஆயிரத்து 825 கிராம் வெள்ளி மற்றும் 1,502 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாகக் கிடைத்துள்ளன. வெறும் 17 நாட்களிலேயே சுமார் 3 கோடி ரூபாய்க்கு நெருக்கமான வருவாய் கிடைத்திருப்பது கோவில் நிர்வாகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

