காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், திருவெஃகா பெரிய பெருமாள் திருக்கோவில் என்றும் போற்றப்படும் ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள் திருக்கோவிலில், ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு கருடசேவை உற்சவம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இந்த உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
கருடசேவை விழாவையொட்டி, ஸ்ரீ யதோத்தகாரி பெருமாளுக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வைலெட் நிற பட்டாடை, திருவாபரணங்கள், மல்லிகைப் பூ மற்றும் பல்வேறு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள், பச்சை நிற பட்டாடை அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து துபம், தீபம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, “பெரிய திருவடி” என அழைக்கப்படும் கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள், முதலில் கோபுர வாசலில் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். பின்னர் மேளதாளம், நாதஸ்வர இசை முழங்க காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வீதியுலா முழுவதும் பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி முழக்கமிட்டு, கற்பூர ஆரத்தி காட்டி பெருமாளை வழிபட்டனர். கருடசேவை உற்சவத்தையொட்டி கோவில் வளாகம் முழுவதும் ஆன்மிகச் சூழல் நிலவியது. பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

