ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றாகவும், புனிதமான நான்கு தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இத்தலத்தின் வரலாறு, சிறப்புகள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாத சுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரே தலம் இதுவாகும். இது வைணவ மற்றும் சைவ ஒற்றுமைக்குச் சான்றாக விளங்குகிறது (ராமன் வழிபட்ட சிவன்).
ராவணனிடம் இருந்து சீதையை மீட்கப், போர் புரிந்து ராவணனை ராமன் கொன்றார். இதன்காரணமாக ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வரக் கூடாது என்பதற்காகவும், ராவணனைக் கொன்ற பாவத்தை நீங்கவும் மணலால் ஆன லிங்கத்தை வைத்து ராமன் பிரதிஸ்டை செய்தார். எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயிலுக்கு ராமேஸ்வரம் (ராம, ஈஸ்வரம்) எனப் பெயர் பெற்றது. மூலவருக்கு ராமநாத சுவாமி என்று பெயர் பெற்றது.
ராமேஸ்வரம் திருக்கோயில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மிகப் பெரிய கோயிலாகும். 865 அடி நீளமும், 657 அடி அகலமும் உடைய ராமேஸ்வரம் கோயிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. கோயிலில் 4 பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும், வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை.
உலகிலேயே மிக நீளமா பிரகாரம் கொண்ட கோயில் இதுவாகும். குறிப்பாக, 1212 தூண்களைக் கொண்ட மூன்றாம் பிரகாரமும் அதன் பிரம்மாண்டமான தூண்கள் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளும் உலகப் பிரசித்திப் பெற்றது. கிழக்கு கோபுரம் 17ம் நூற்றாண்டின் இறுதியில் சேதுபதி மன்னரின் முதலமைச்சர் முத்திருளப்பபிள்ளையால் கட்டப்பட்டது.

கோயில் வளாகத்திற்குள் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. ‘மஹா லட்சுமி தீர்த்தம்’ தொடங்கி ‘கோடி தீர்த்தம்’ வரை உள்ள இந்த கிணறுகளில் நீராடுவது பாவங்களைப் போக்கும் என்பது நம்பிக்கை. முதலில் கடலில் (அக்னி தீர்த்தம்) நீராடி விட்டு, பின் இந்த 22 தீர்த்தங்களில் நீராடுவது மரபு. இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வு வளம் பெருகும் என்பது இந்து தர்ம நம்பிக்கை.

வடக்கே உள்ள காசியும், தெற்கே உள்ள ராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணியத் தலமாக கருதப்படுகிறது. காசி யாத்திரை ராமேஸ்வரத்தில் தான் முழுமை பெறுகிறது என்பது ஐதீகம். காசியில் இருந்து கங்கைத் தீர்த்தம் கொண்டு வந்து ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதும், ராமேஸ்வரம் மணலை எடுத்துச் சென்று திரிவேணி சங்கமத்தில் கரைப்பதும் தொன்றுதொட்டு வரும் பழக்கமாக உள்ளது.
ராமாயணம் எவ்வளவு பழமையானதோ, அந்தளவு பழமையானது ராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் ராமநாத சுவாமி கோயில்.

