பழனியில்கொடியேற்றத்துடன் இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகத் திருவிழா பக்திப் பரவசத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் முக்கியப் பெருந்திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாகத் திருவிழா இன்று (24-05-2026, ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில், இன்று அதிகாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் கொடிமரத்தில் முறைப்படி திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கிரிவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 29-ஆம் தேதியும், புகழ்பெற்ற வைகாசி விசாகத் தேரோட்டம் 30-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 2-ஆம் தேதி இரவு கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா நிறைவு பெறுகிறது.

